மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதிப்பு என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையான இயலாக் குழந்தைகளும் லட்சக்கணக்கில் பயன்பெறுகின்றனர். இத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மையங்களிலும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அந்தஸ்தில், வட்டார மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இத்திட்டத்தின் முக்கியப் பணியிடமாக இது கருதப்படுகிறது. மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதால் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை திட்டத்தில் இருந்து நீக்குவது தொடர்பான எவ்வித முடிவும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், சீனியாரிட்டி அடிப்படையில், ஆண்டுதோறும், ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேர், “ரெகுலர்’ பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

இத்திட்ட மேற்பார்வையாளர்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்தால், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு “பேனலில்’ உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், மாநிலம் முழுவதும் 500 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை, “பேனலில்’ உள்ள தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் நிரப்ப வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக் கூடாது. இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

Leave a comment